இளைஞர்களின் “கவர்ச்சி’ பொருளாக மாறிவரும் ருத்ராட்சம்
இளைஞர்கள் மத்தியில் ருத்ராட்சம் “கவர்ச்சி’ பொருளாக மாறிவருகிறது. பல ஆபரணங்களுடன் சேர்த்து ருத்ராட்சத்தை அணிய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பூசாரிகள் கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்திருப்பது போல், இப்போது இளைஞர்களும் ருத்ராட்சம் அணியத் துவங்கி விட்டனர். ஆண்கள் தவிர, பெண்களும் இப் போது ருத்ராட்சத்தால் ஆன நகைகளை அணியத் துவங்கியுள்ளனர். ஒரு டஜனுக்கும் அதிகமாக பல டிசைன்களில் தற்போது ருத்ராட்ச ஆபரணங்கள் கிடைக் கின்றன. விலை, ரூ.250 முதல் பல ஆயிரம் ரூபாய் வரை செல்கிறது. இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த ருத்ராட்ச ஆபரணங்களையே வாங்குகின்றனர். மோதிரத்தில் பதிக்கப்பட்ட ருத்ராட்சம், தங்கச் சங்கிலியாலான ருத்ராட்ச மாலை, கவர்ச்சியான பிரேஸ்லெட் போன்றவற்றை விரும்பி அணிகின்றனர்.ருத்ராட்சம் அணிவது குறித்து, அம்பேத்கர் கல்லூரி மாணவன் கூறுகையில், “”ருத்ராட்ச ஆபரணங்கள் விலை குறைவாக கிடைக்கின்றன. இதை அணிவதால் கவர்ச்சியான தோற்றம் கிடைக்கிறது,” என்றார். ருத்ராட்சத்தால் தயாரிக்கப்பட்ட ஆபரணங்களின் தேவை அதிகரித்து வருவதால், நகைக் கடைகளில் நிறைய டிசைன்கள் மேலும் தயாராகி வருகின்றன. வாங்குபவருக்கு தகுந்தபடி தனி தோற்றப் பொலிவுடனும், குறைந்த விலையிலும் கிடைப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து டில்லி விகாஸ் மார்கில் உள்ள பிரபல நகைகடை அதிபர் கூறுகையில், “”தனியாக உள்ள ருத்ராட்சம் மிகவும் குறைவாகவே விற்பனை ஆகிறது. ஆனால், ஆபரணங்களுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட ருத்ராட்சங்கள் கடந்த சில மாதங்களாக அமோக விற்பனையாகியுள்ளன. 18 ல் இருந்து 25 வயதுடைய இளைஞர்கள் தான் ருத்ராட்சம் பதித்த ஆபரணங்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். 11 மற்றும் 14 முகம்கொண்ட ருத்ராட்சம் தான் மிகமிக அதிக விலை கொண்டது. இரண்டில் இருந்து எட்டு முகம் கொண்ட ருத்ராட்சம், 250 ரூபாயில் இருந்து 750 ரூபாய் வரை கிடைக்கிறது,” என்றார்.
ருத்ராட்சம் குறித்து நன்கு அறிந்த பூசாரி ஒருவர் கூறுகையில், “”ருத்ராட்சம் அணிவதால் சில நன்மைகள் உள்ளன. இருந்தாலும், மரத்தினால் செய்யப்பட்ட போலி ருத்ராட்சமும் கடைகளில் கிடைக்கிறது. அசல் ருத்ராட்சம், தண்ணீரில் போட்டவுடன் முழுகிவிடும். எனவே, அசலுக்கும், நகலுக்கும் வித்தியாசம் பார்த்து வாங்கி அணிவது உடலுக்கு நல்லது,” என்றார்.