சினிமாவில் நடிக்க அனுமதிக்க கோரி மோனிகா பேடி சுப்ரீம் கோர்ட்டில் மனு
நிழல் உலக தாதா அபு சலீமின் காதலியும் முன்னாள் பாலிவுட் நடிகையுமான மோனிகா பேடி,தான் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.இம்மனு அடுத்த மாதம் இரண்டாம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. அபு சலீமும் அவரது காதலியுமான மோனிகா பேடியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுக்கலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என்பதால் அபு சலீம் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அபு சலீமும்,மோனிகா பேடியும் போலியாக பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு சென்றதாக ஐதராபாத் மற்றும் போபால் ஆகிய இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஐதராபாத் கோர்ட் மோனிகா பேடிக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. சிறையிலிருந்த மோனிகா, தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த மே மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.ஆனால்,அவர் பஞ்சாபிலுள்ள சப்வால் என்ற தன்னுடைய சொந்த ஊரிலிருந்து போலீஸ் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையையும் நீதிபதிகள் விதித்தனர்.இந்நிலையில் பாலிவுட் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக தனக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன.கோர்ட் உத்தரவு தன்னுடைய சினிமா வாய்ப்புகளுக்கு இடையூறாக உள்ளன.எனவே தனக்கு படத்தில் நடிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மோனிகா மனுத்தாக்கல் செய்துள்ளார்.இம்மனு அடுத்த மாதம் இரண்டாம் தேதி விசாரணைக்கு கோர்ட் எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்துள்ளது.