டார்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மத்தியஸ்தர் குழு தீவிர முயற்சி
டார்பூர் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக லிபியாவில் இடம்பெற்று வரும் பேச்சுக்களில் சாதகமானதொரு நிலைப்பாட்டை அடைவதற்கு சர்வதேச மத்தியஸ்தர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப் பேச்சுக்களை பகிஷ்கரித்துள்ள முக்கிய போராளிக் குழுக்கள் சூடான் அரசுடனான பேச்சுக்களுக்கு தயாராவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் காண் எலிசன் தெரிவித்துள்ளார். திகதி குறிக்கப்படாத உறுதியான அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்பு பேச்சுக்களை பகிஷ்கரித்த முக்கிய போராளி அமைப்புக்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்தியஸ்தர்கள் டார்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். கடந்த வார இறுதியில் லிபியாவில் இடம்பெற்ற பேச்சுக்கள் உறுதியான அமைதிப் பேச்சுக்களுக்கான ஆரம்பமென கருதப்படுகிறது. இடம்பெற்ற கூட்டத் தொடரின் முடிவில் அமைதி முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்து விட்டதென்பதை தான் நிராகரிப்பதாக தெரிவித்த எலிசன் சகல கட்சிகளும் தயாரானதும் உறுதியான அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்தார். இப் பேச்சுக்களுக்கான திகதி அறிவிக்கப்படாத போதும் இன்னும் மூன்று வாரங்களில் இப் பேச்சுக்கள் ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுவதாக எலிசன் தெரிவித்தார். இதேவேளை, சூடான் அரசாங்கம் மற்றும் ஆறு போராளி அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுக்கள் மூடிய கதவுகளுக்கிடையில் தொடர்ந்தும் லிபியாவில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.