கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்றும் தோல்வி!!
இன்று இடம்பெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் மற்றுமொரு பேச்சுவார்த்தை எதுவித முடிவுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் 03 தொழிற் சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்ட கம்பனிகள் ஆகிய பிரதிநிதிகளுக்கிடையில் தொழில் அமைச்சர் எஸ். பி. நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் எதுவித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை.
வாரத்தில் முதல் மூன்று நாட்களுக்கு (திங்கள், செவ்வாய், புதன்) அடிப்படை சம்பளமாக 15 கி.கி. கொழுந்திற்கு 550 ரூபாவும் ஏனைய நாட்களுக்கு 01 கி.கி. கொழுந்திற்கு 40 ரூபா என்ற அடிப்படையிலும் கொடுப்பனவு வழங்கப்படும் என்ற தீர்வு திட்டத்தினையே முதலாளிமார் சம்மேளனம் இன்றைய தினமும் சமர்பித்திருந்தது.
இதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதனை நிராகரித்ததோடு கூட்டு ஒப்பந்த விதிகளுக்கமைய சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியான நிலையில் இருந்ததால் இவர்களுக்கிடையில் சமரசம் ஏற்படுத்தி இணக்கப்பாட்டுக்கு வர தொழில் அமைச்சர் எஸ். பி. நாவின்ன கடும் முயற்சி எடுத்த போதும் அது பலனளிக்கவில்லை.
அதனடிப்படையில் இன்றைய பேச்சுவார்ததையும் எதுவித தீர்மானமும் இன்றி நிறைவுக்கு வந்துள்ளது.
சம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் தொடருமா இல்லையா என்பதை இனி தொழிற் சங்கங்களே அறிவிக்கும்.
இன்றைய சந்திப்பில் இ.தொ.கா. சார்பில்அதன் தலைவர் முத்து சிவலிங்கம், பொது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், சிரேஷ்ட தலைவர் மாரிமுத்து ஆகியோரும் தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் வேலாயுதம், பிரதிநிதி இராஜதுரை ஆகியோரும் பெருந்தோட்ட கூட்டுக் கமிட்டி சார்பில் ராமநாதன், பிரதிநிதி முருகையா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
Average Rating