குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் எரித்துக்கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை
குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டில் மாதத்தில் பயங்கர கலவரம் மூண்டது. இந்த கலவரத்தின்போது, பஞ்ச்மஹால்ஸ் மாவட்டம் எரோல் பகுதி கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அங்கு ஒரே வீட்டில் 7 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். அவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட 2 இளம் பெண்கள், கொலை செய்யப்படுவதற்கு முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான மதீனாபீபி ஷேக்கின் புகாரின் பேரில், கோத்ரா கூடுதல் செசன்சு கோர்ட்டில் போலீசார் 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து இருந்தனர். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எச்.எம்.தொலாக்கியா தீர்ப்பு கூறினார். அவர்களில் 3 பேருக்கு கற்பழிப்பு குற்றப்பிரிவின் கீழும் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு, கலவரம்-சூறையாடல் குற்றப்பிரிவின்கீழ் தலா 3 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே இந்த தண்டனை காலத்தை ஜெயிலில் கழித்துவிட்டதால் விரைவில் விடுவிக்கப்படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட 40 பேர்களில், மற்ற 29 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக, மதீனா பீபியின் வக்கீல் சிராஜ்மாலிக் நிருபர்களிடம் தெரிவித்தார்.