ததேகூ சோரம் போகாத சக்தி அல்ல – ஈரோஸ்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாத அரசியல் தலைமையாக தோற்றம் பெறவில்லை என ஈரோஸ் கட்சியின் செயலாளர் ஆர்.பிரபாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈரோஸ் போட்டியிடுவதாக கூறிய அவர், கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளையும் சுட்டிக் காட்டினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் அடாவடித்தனங்களையும் அட்டகாசங்களையும் பார்த்துவிட்டு அந்த போக்கினை கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்பதியான நடவடிக்கையினை பார்த்த மக்கள் இன்று வாக்களிக்க செல்லாமல் இருக்கின்றார்கள். மாற்று சக்தி ஒன்று தேவைப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்கட்சியாக ஈரோஸ் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை மாற்றி மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வந்து நாட்டிற்கு ஆட்சி மாற்றத்தினை கொடுத்த எமது மக்களுக்கு மாற்றம் தேவை. தமிழ் மக்களின் எண்ணங்களையும், அபிலாஷைகளையும் மாற்றுவதற்கு ஒரு தலைமை தேவை. அந்த தலைமையை உருவாக்குவதே ஈரோஸின் கடமை.
எதிர்காலத்தில் ஈரோஸ் ஒரு நல்ல தலைமைத்துவத்தினை வடகிழக்கு உட்பட மலையகத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும் உருவாக்கும் என்றும் ஆர்.பிரபாகரன் நம்பிக்கை வெளியிட்டார்.
Average Rating