பாகிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 45 பேர் பலி
பாகிஸ்தான் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்கம்பி மீது மோதி கீழே விழுந்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 45பேரும் உடல் கருகிச்செத்தனர். விமானத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் 2பேரும், ராணுவத் தளபதிகள் 2பேரும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவரும் பயணம் செய்தனர். அவர்களும் பலியானார்கள்.
பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான விமானக் கம்பெனியின் விமானம் ஒன்று பஞ்சாப் மாநிலம் முல்தான் நகரில் இருந்து லாகூர் வழியாக இஸ்லாமாபாத் நகருக்கு புறப்பட்டது. இதில் 41 பயணிகளும் 4 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட 10 நிமிடத்தில் அது மின் கம்பியில் மோதி கீழே விழுந்தது. விமான நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக் கூடத்துக்கு அருகே உள்ள காலி இடத்தில் விமானம் விழுந்தது. உடனே அதில் தீப்பிடித்தது. அதில் இருந்த அத்தனை பயணிகளும் உடல் கருகிச் செத்தனர்.
விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அது வெடித்துச் சிதறுவதற்கு முன்பு மின்சாரக் கம்பியில் மோதியது.
விமானத்தில் பயணம் செய்த லாகூர் ஐகோர்ட்டு நீதிபதிகள்2பேரும் ராணுவ பிரிகேடியர்கள் 2பேரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவரும் பலியானார்கள். இந்த விபத்தில் ஒருபயணி கூட தப்பவில்லை. ராணுவம் மீட்புப்பணியில் ஈடுபட்டது. விமானத்தின் உடைந்த பாகங்களில் சிக்கி இருந்த உடல்களை அவர்கள் மீட்டனர்.