வேலூரில் ஆண் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு கேமரா மூலம் தேடுதல் வேட்டை!!
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே கனகதுர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள நடைப்பாதையில் சிலர் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்கள். அவர்கள் அப்பகுதியில் பொம்மை உள்பட பல்வேறு கைவினைப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 22) அவரது மனைவி திரிஷா ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கணேசன் (3), தனுஷ் (1) என 2 மகன்கள் உள்ளனர்.
வழக்கம் போல் திரிஷா நேற்று முன்தினம் இரவு தனது 2 குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்து விட்டு அவரும் தூங்கி உள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் குழந்தை தனுஷ் அழுதுள்ளது. இதையடுத்து திரிஷா குழந்தை தனுஷ்க்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்துள்ளார். காலை 6 மணியளவில் திரிஷா விழித்து பார்த்த போது அருகில் படுத்திருந்த தனுசை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரிஷா புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். குழந்தை தூங்கிய இடத்திற்கு அருகே உள்ள ஓட்டல் வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராவில் குழந்தை கடத்தல் சம்பவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து பார்வையிட்டனர். இதன் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
வாணியம்பாடி டவுன் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் பெற்றோருடன் தூங்கிய 2 பச்சிளங் குழந்தைகள் கடத்தப்பட்டனர்.
வாணியம்பாடி டவுன் போலீசார் குழந்தைகளை தேடிவந்தனர். ஆனால் இதுவரை குழந்தை கண்டுபிடிக்கபடவில்லை. இந்த நிலையில் வேலூரில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating