துபாய் விமானத்தில் பெண்ணுக்குப் பிரசவம்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு விமானத்திலேயே பிரசவ வலி வந்து ஒரு குழந்தையைப் பெற்றார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவருக்கு வழியிலேயே இன்னொரு குழந்தையும் பிறந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நசீம் பீபி (22). இவர் ஜெட்டாவிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு எமிரேட்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பீபிக்கு, விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பிரசவ வலி வந்தது. சில நிமிடங்களிலேய ஒரு பெண் குழந்தை அவருக்குப் பிறந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. நசீம் பீபியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அல் வாசி மருத்துவமனையில் பீபி சேர்க்கப்பட்டார். தற்போது பீபிக்கு ஒரு புதுப் பிரச்சினை எழுந்துள்ளது. மருத்துவமனை சிகிச்சைச் செலவாக அவர் 5000 திர்ஹாம்களை கட்ட வேண்டுமாம். ஆனால் அவ்வளவு பணம் நசீம் பீபியிடம் இல்லை. இதனால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை மறுத்து வருகிறதாம். இதுகுறித்து நசீம் பீபி கூறுகையில், மருத்துவமனை செலவாக நான் 5000 திர்ஹாம் பணம் கட்ட வேண்டியுள்ளது. ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனக்கும், பிறந்துள்ள எனது குழந்தைகளுக்கும் யார் உதவுவார்கள் என்று தெரியாமல் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார் பீபி. தற்போது பீபியை பிரச்சினையிலிருந்து மீட்க பாகிஸ்தான் தூதரகம் களத்தில் இறங்கியுள்ளது.