ஊனமுற்றவரை பஸ்ஸிலிருந்து தள்ளிய கண்டக்டர் சஸ்பெண்ட்
திருச்சியில் ஊனமுற்ற வாலிபரை பஸ்ஸில் ஏற்ற மறுத்து தள்ளிவிட்ட கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து திருச்சி கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். ஊனமுற்ற வாலிபர். இவர் வெளியில் எங்கு சென்றலும் யாராவது ஒருவரது துணையுடன் தான் செல்ல முடியும். சம்பவத்தன்று, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த ரவிக்குமார், தனது வீட்டுக்கு செல்ல மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இருந்து பொன்நகர் செல்ல தனது தாயார் கனகமணியுடன் அங்கு வந்த ஒரு தனியார் பஸ்ஸில் ஏற முயன்றார்.ஆனால் ரவிக்குமாரை பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் கண்டக்டர் அவரை கீழே தள்ளி விட்டார். அதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ரவிக்குமார் திருச்சி மாவட்ட கலெக்டர் ஆசிஷ்வச்சானியிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் அதிரடி விசாரணை நடத்திய கலெக்டர் ஆசிஷ்வச்சானி, ரவிக்குமாரை தள்ளிவிட்டதோடு தகாத வார்த்தைகள் பேசிய பஸ் கண்டக்டரை ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.