குமரியில் பெண் குழந்தையை ரூ.63 ஆயிரத்துக்கு விற்று விட்டு தொலைந்து விட்டதாக நாடகமாடிய தந்தை!!
கோவை சவுரிபாளையம் மட்டசாலையை சேர்ந்தவர் ராமன்(வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(23). இவர்களுக்கு 5 வயது, 3 வயது மற்றும் ஒரு வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராமன் கடந்த மாதம் 28–ந் தேதி 2 குழந்தைகளை சேலத்தில் உள்ள மாமனார் வீட்டில் விட்டு விட்டு மனைவி மீனா மற்றும் கடைசி கைக்குழந்தையுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு மீனா கடைக்கு சென்றிருந்த நேரத்தில் ராமனிடம் இருந்த குழந்தை மாயமானது.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த மீனா குழந்தையை எங்கே? என கேட்ட போது ராமன் குழந்தை தொலைந்து விட்டதாக கூறினார். இதனால் மீனா அதிர்ச்சியடைந்தார். பின்னர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்துவிட்டு திரும்பி விட்டனர்.
மீனா, குழந்தை தொலைந்த சோகத்தில் இருந்ததால் அவரை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு ராமன் கோவை திரும்பினார். இங்கு ராமன் ஆடம்பரமாக பணத்தை செலவழித்துள்ளார். இது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இதுகுறித்து மீனாவுக்கு தகவல் கூறினர். எனவே கணவர் மீது மீனாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து மீனா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமனை பிடித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த குமாரசாமி என்ற புரோக்கர் மூலம் கன்னியா குமரி மாவட்டததை சேர்ந்த ஒருவருக்கு ரூ.63 ஆயிரத்துக்கு குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து குமாரசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. குமாரசாமி நாகர்கோவிலை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்ததாகவும், அந்த பெண் குழந்தையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பல் என்பதும், இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் இதுபோன்று வேறு எந்த குழந்தையையாவது விற்பனை செய்திருக்கலாம் என்றும், குழந்தை கடத்தும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து ஒரு தனிப்படை போலீசார் குழந்தையை மீட்பதற்காக கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர். ராமன், குமாரசாமி ஆகியோரையும் தனிப்படை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் உள்ள குழந்தைகள் விற்பனை செய்யும் புரோக்கர்களை பிடித்து விசாரிக்கும் போது இந்த கும்பல் பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating