பிரகாஷ் ராஜின் புது ‘சாதனை’
பிரகாஷ் ராஜ் புது சாதனை படைத்துள்ளார். திரிஷாவுக்கு மாமனாக நடித்த அவர் அப்பாவாகவும் நடித்து வருகிறார். அடுத்து அண்ணனாக நடிக்கப் போகிறாராம். தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், உறவுகளை மாற்றி நடிப்பது புதிதான விஷயமல்ல. சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்துள்ள சாவித்ரி, தங்கையாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இப்படி விதம் விதமான கேரக்டர்களில் நடிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் இந்த விஷயத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு புது சாதனையைப் படைத்துள்ளார். கில்லி படத்தில் திரிஷாவின் மாமன் வேடத்தில் கலக்கியிருப்பார் பிரகாஷ் ராஜ். மாமன் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார மாமன் கேரக்டரில் பிரகாஷ் ராஜ் அசத்தியிருப்பார். இந்த நிலையில் தற்போது, ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் அபியும் நானும் படத்தில் திரிஷாவின் அப்பா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது பிரகாஷ் ராஜின் சொந்தப் படம். இதைத் தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்க, தரணி இயக்க, அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்க உருவாகும் குருவி படத்தில் திரிஷாதான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் திரிஷாவின் அண்ணன் கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறாராம்.
கில்லி படத்தில் தரணியுடன் ஏற்பட்ட நடிப்பால் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் அழைக்க தட்டாமல் ஏற்றுக் கொண்டாராம் பிரகாஷ் ராஜ்.
கில்லியில் திரிஷாவின் மாமனாக வந்து, அபியும் நானும் படத்தில் அப்பாவாக மாறி, அடுத்து அண்ணன் அவதாரம் எடுத்துள்ளார் பிரகாஷ் ராஜ். சமீப காலத்தில் ஒரு முன்னணி நடிகையுடன் இப்படி மூன்று விதமான உறவுகளைக் கொண்ட வித்தியாசமான கேரக்டரில் யாருமே நடித்ததில்லை. அந்த வகையில் பிரகாஷ் ராஜ் செய்துள்ளது ஒரு சாதனைதான்.