கிரிமினல் வழக்கு – கிரகலட்சுமி கோரிக்கை
முதல் கணவரிடமிருந்து எனக்கு விவகாரத்து வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும்வரை என் மீதான கிரிமினல் வழக்கை விசாரிக்க கூடாது என்று கோரி நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமி மனுத்தாக்கல் செய்துள்ளார். முதல் திருமணம் செய்து கொண்டதை மறைத்து தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்து கொண்டதுடன், பணம் கேட்டு மிரட்டுவதாக கிரகலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது நடிகர் பிரசாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் செய்தார். இதனையடுத்து கிரகலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையி்ல் முதல் கணவர் வேணுபிரசாத் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த 2 மனுக்களின் விசாரணையும் நிலுவையில் உள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றம், பிரசாந்த் தாக்கல் செய்த மனு மீது விசாரணை எடுக்கக் கோரி தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கிரகலட்சுமி உட்பட அவருடைய குடும்பத்தார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த 6 பேருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனையடுத்து இந்த 6 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார். இந்த வழக்கை தொடர்ந்து நடத்தக் கூடாது என்று கோரி கிரகலட்சுமி தரப்பில் வழக்கறிஞர் மூர்த்தி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பிரசாந்த் குடும்பத்தினர் மீது கிரகலட்சுமி வரதட்சணை புகார் கொடுத்தார். போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் வேணு பிரசாத் நாராயணன் சொல்வது அனைத்தும் பொய்யான தகவல்களாகும்.
முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்து கொண்ட வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்டிருப்பதால், முதல் திருமணம் உண்மையா அல்லது பொய்யா என்று கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
எனவே குடும்ப நல நீதிமன்றத்தில் வேணுபிரசாத் கொடுத்த விவகாரத்து வழக்கில் இறுதி தீர்ப்பு வெளிவரும் வரை இந்த வழக்கின் விசாரணையை நடத்தக் கூடாது என்று கூறப்பட்டிருந்த்து.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரும் 15ம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.