தமிழ் ஞானசாரக்களை இனம்கண்டு விரட்டியடிப்போம்!!
எமது தமிழ், முஸ்லிம் சமூகத்தை கூறுபோடும் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஏவலாளிகளாக உலவுகின்ற தமிழ் ஞானசாரக்களை இனம் கண்டு விரட்டியடிக்க ஒன்றுபட வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான எம்.திலகர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பள்ளிவாசலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்காக இடம்பெற்ற துவா பிரார்த்தனை முடிந்த பின் உரையாற்றும்போதே தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்து தெரிவிக்கும்போது மேலும் தெரிவித்ததாவது,
ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பீதியுடன் வாழும் நிலைமையே காணப்பட்டது. அதன் தோற்றுவாயாக இனத்துவேசத்தின் தூதராக ஞானசார செயற்பட்டு வந்தார். சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஆட்சி மற்றத்தின் மூலம் அவர்களின் கொட்டத்தை அடக்கியிருந்தாலும், தமிழ் ஞானசாரக்கள் நம் மத்தியில் உலா வருகின்றனர்.
வன்னியில் ரிஷாட் அவர்களையும் நுவரெலியாவில் திகாம்பரத்தையும் இலக்கு வைத்து திட்டமிட்ட வகையில் அவர்களுக்கென்றே தனியார் தொலைக்காட்சி வைத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பஸ் சின்னத்தில் எமது சமூகத்தை சார்ந்த மலையக பெண்களை களமிறக்கி அவர்களை கேலி கூத்துக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலிலும் இடம்பிடித்துக் கொண்டு இரட்டை வேடம் காட்டி வருகின்றார்.
மஹிந்தவின் ஏவலாளியாக செயற்பட்டு எமது சிறுபான்மை மக்களை இருப்பை கேள்விக்குறியாக்கி வரும் ரங்கா தொடர்பில் நாம் விழிப்புடன் செயற்பட்டு எமது சமூகத்தின் இருப்பினை அடையாளத்தினை காத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Average Rating