நடுரோட்டில் பாம்பிற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: 21 பாம்பு குட்டிகள் பிறந்தன
உசிலம்பட்டி அருகே பஸ்சில் அடிப்பட்டு இறந்த கிடந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் 21 பாம்பு குட்டிகள் பிறந்தன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சினேக்ரமேஷ் (வயது 29). இவர் பாம்பு மற்றும் வனவிலங்குளை பாதுகாக்கும் பொருட்டு “நேதாஜி பாம்புகள் ஆராய்ச்சி மையம்” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சினேக்ரமேஷ் உசிலம்பட்டியிலிருந்து மோட்டார் சைக்களில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் செக்கானூரணி அருகே உள்ள ரெயில்வே கேட் அருகே ரோட்டில் 51/2 நீளமுள்ள பச்சைப்பாம்பு பஸ்சில் அடிப்பட்டு இறந்து கிடந்தது. இறந்து கிடந்த பாம்பை பார்த்த ரமேஷ் அந்த பாம்பு கர்ப்பமாக இருப்பதை அறிந்தார். உடனே அந்த இடத்திலேயே இறந்த பாம்பின் வயிற்றை அறுத்து அதில் இருந்து 21 குட்டிகளை எடுத்தார். அதில் 2 பாம்புக்குட்டிகள் மட்டும் இறந்து விட்டன. மீதமுள்ள 19 பாம்புகுட்டிகள் உயிருடன் உள்ளன. இது குறித்து மாவட்ட வனஅலுவலர் பாலாஜிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரின் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி வனஅலுவலர் தேவராஜ், ஊழியர் செல்லமணி ஆகியோரிடம் அந்தபாம்பு குட்டிகள் ஒப்படைக்கப்பட்டன.