திருவெண்ணைநல்லூர் அருகே மேலும் ஒரு பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் சாலை மறியல்!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூரில் சுடுகாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 24 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பது இதுவரை தெரியவில்லை.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவெண்ணைநல்லூர் அருகே மேட்டுக்குப்பத்தில் மேலும் ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி கலா, (வயது 40). அங்குள்ள தனியார் பள்ளியில் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவரை திடீரென காணவில்லை. பல பகுதிகளிலும் தேடி பார்த்தனர். கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேட்டுக்குப்பத்தில் தனியார் பள்ளியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள வயல்வெளியில் இன்று காலை கலா பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்தன.
இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கலாவின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. அவரை மர்ம மனிதர்கள் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டுக்குப்பம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஞானாம்மாள், சாந்தா ஆகியோரும் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்கள். கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. தற்போது கலாவும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
எனவே, பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். மேட்டுக்குப்பத்தில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
கலா வேலை செய்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
Average Rating