பணத்திற்காக 20 வருடங்களாக ஒரே இடத்தில் சங்கிலிகளால் கட்டப்பட்டு, வதைக்கப்படும் யானைகள்!!
சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்திற்காக யானைகள் மனசாட்சியே இல்லாமல் மனிதர்களால் வதைக்கப்படுவது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கை நிருபர் எழுதியுள்ள கட்டுரை பலரையும் அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது.
லிஸ் ஜோன்ஸ் என்ற நிருபர் சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வருகை தந்தார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கேரளாவுக்கு வந்தவர், புகழ்பெற்ற ஒரு கோவிலில் முன்னங்காலும் பின்னங்காலும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் யானை ஒன்று நகரக் கூட முடியாமல் சிரமப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பாகன்களின் கையில் கூர்மையான முனை கொண்ட அங்குசத்தால் யானைகள் கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பார்த்து மனம் நொந்த இவர் Save The Asian Elephants (STAE) என்ற லண்டன் வழிக்கறிஞர் உதவியால் நடத்தப்படும் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்களுடன் உரையாற்றினார்.
இது தொடர்பாக, பேராசிரியர் மற்றும் ஒரு யானைப்பாகனுடன் பேசியபோது அவருக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. இவர் முதலில் பார்த்த யானை 20 வருடங்களாக அந்த ஒரே இடத்தில் கட்டப்பட்டிருப்பதையும், அதற்கு அருகில் உள்ள மற்றொரு யானை 35 வருடங்களாக கோவிலிலேயே இருப்பதையும் அறிந்து கொண்ட அவர், இதற்கான காரணம் சுற்றுலாப் பயணிகள்தான் என்பதைக் கண்டுகொண்டார். யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தால், திருவிழாக் காலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 5 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் அளவிற்கு இது ஒரு தொழிலாக மாறியிருக்கிறது.
இதேபோல மொத்தம் 57 யானைகள் அந்த கோவிலில் உள்ளன. ஆசியாவின் காடுகளில் பொறி வைத்து பிடிக்கப்படும் இந்த ஆசிய யானைகள், பாகனின் கட்டளைக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அதை சிறிய கூண்டுக்குள் அடைத்து முகாம் ஒன்றில் கடுமையாக வதைக்கப்படுகிறது. இதன் மூலமாக யானையின் மனதிற்குள் கடுமையான பயத்தை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவை கோவில் நிர்வாகங்களால் வாங்கிச் செல்லப்படுகின்றன.
இதேபோல் கர்நாடகாவில் உள்ள ஒரு யானைகள் வதை முகாமிற்குச் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் சேர்த்து இவர் சமீபத்தில் டெய்லி மெயில் என்ற பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரை சர்வதேச அளவில் தற்போது ஒரு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மிருக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Average Rating