மத்தளை நெற்களஞ்சியசாலையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!
மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் நெற்களஞ்சிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக கூடியமை, சட்டவிரோதமாக உள்நுழைந்தமை, சட்டவிரோத இடையூறு, அத்துமீறல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தி BR 32544 / 2015 வழக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருக்கு எதிராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (04) திஸ்ஸமாஹாராம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
லுனுகம்வெகர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜித உபேவர்ண மற்றும் இருவர் உட்பட விமான நிலையத்தில் பணி புரியும் இருவருக்கும் இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் விமான நிலைய நிர்வாக அதிகார சபையின் முகாமையாளர் சுசில் கலங்கசூரிய மற்றும் மத்தளை விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கும் இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஆட்களை உள்நுழைய அனுமதித்தமை மற்றும் விமான நிலையத்தில் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாமைக்கு எதிராக இவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தங்காலை தொகுதி பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதன் மாரசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Average Rating