உடல்நிலை மோசமானதால் வேலூர் ஆஸ்பத்திரியில் முருகன் அனுமதி-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் வேலூரில் தனி தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியின் மகள் அரிச்சந்திரா என்ற மேகரா இலங்கையில் உள்ளார். இவருக்கு மத்திய அரசு உடனடியாக விசா வழங்க கோரி முருகன் 18-வது நாளாகவும், நளினி 17-வது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இருவரும் தண்ணீர் மட்டுமே குடித்து வந்தனர்.
உண்ணாவிரதம் இருந்து வந்த முருகனின் உடல்நிலை நேற்று இரவு மோசமானது. அவரது உடலை பரிசோதிக்க வேலூர் கலெக்டர் தர்மேந்திர யாதவ், போலீஸ் சூப்பிரண்டு அசோக் குமார் ஆகியோருடன் மருத்துவ குழு சென்றது.
உடல்நிலை மிகவும் கவலைகிடமாக இருப்பதால் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே போல நளினியின் உடல்நிலையும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படலாம்.