மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்த கணவர்!!
புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் மதுரை முத்து (வயது 48). இவரது மனைவி மல்லிகா (46). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்
குடிப்பழக்கத்துக்கு அடிமையான மதுரை முத்து மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்வார். அதேபோல நேற்று இரவு 8.30 மணி அளவில் மது குடிக்க பணம் கேட்டாராம். ஆனால் மல்லிகா பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதுரை முத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மனைவி மல்லிகா மீது ஊற்றினார்.
உடனே மல்லிகா வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். அவரை மதுரை முத்து விரட்டினார். கணவரிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள பூங்காவில் புகுந்து மல்லிகா பதுங்கினார்.
இதனை கண்ட மதுரை முத்து கையில் இருந்த தீப்பெட்டியை உரசி மல்லிகா மீது வீசினார். ஏற்கனவே மண்ணெண்ணெயில் நனைந்து இருந்த மல்லிகா புடவையில் தீப்பற்றியது. உடலில் எரியும் தீயுடன் மல்லிகா ரோட்டில் ஓடினார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணபிரபு போலீசாருடன் வந்து மல்லிகாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மல்லிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை முத்துவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating