தண்டையார்பேட்டையில் பரிதாபம் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலி கைது; கணவன் ஓட்டம்
கணவனின் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். கணவனை தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பஷீர் அகமது (35). பர்மா பஜார் கடையில் வேலை செய்கிறார். அவரது மனைவி ஷகிலா (32). அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பஷீர் அகமதுவுக்கும் திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த செய்தூன்பீவி (28) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இது ஷகிலாவுக்கு தெரியவரவே கணவனை கண்டித்தார். ‘அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைக்காதீர்கள், இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள் என்று கணவனிடம் கெஞ்சினார். எனினும் அவர் செய்தூன் பீவியுடன் உள்ள தொடர்பை நிறுத்தவில்லை. மனம் உடைந்த ஷகிலா, கடந்த சில தினங்களுக்கு முன் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு போலீசாரிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில், ‘என் கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. சரியாக வீட்டுக்கு வருவது கிடையாது. அந்த பெண்ணே கதி என்று இருந்தார். அதனால் நான் மனம் உடைந்து தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார்.
அதன்பின் அவர் இறந்தார். இதன் அடிப்படையில், ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ஜவஹர் வழக்குப்பதிவு செய்து, கள்ளக்காதலி ஜெய்துன்பீவியை கைது செய்தார். தலைமறைவான பஷீர்அகமதுவை வலைவீசி தேடி வருகிறார்.