விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரம் வாக்கி டாக்கி’களை உடைத்தார் வாலிபர்
டில்லி சென்ற விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரமடைந்த ஒரு வாலிபர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான “வாக்கி டாக்கி’களை உடைத்தெறிந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியைச் சேர்ந்தவர் சம்போ மகோபத்ரா (27). இவர் டில்லியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார். இவரும், இவருடன் பணி புரியும் பெண் ஒருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு சுற்றுலா சென்றனர். விமானம் மூலம் சென்னை திரும்பினர். பன்னாட்டு முனையத்தில் வந்து இறங்கிய இவர்கள், உள்நாட்டு முனையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு டில்லி புறப்படும் “ஜெட்லைட்’ விமானத்தில் டில்லி செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர். பன்னாட்டு முனையத்தில் நடந்த பாதுகாப்பு சோதனையில் தாமதம் ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் உள்நாட்டு முனையத்திற்கு 6.20 மணிக்கு தான் வந்தனர். இதற்குள் டில்லி செல்லும் விமானத்தின் “போர்டிங்’ முடிக்கப்பட்டுவிட்டது. தனியார் விமான அதிகாரிகளிடம் தங்கள் நிலைமையை விளக்கி கூறிய பின்னர் அவர்கள் இருவருக்கும் “போர்டிங்’ கார்டு போட அனுமதிக்கப்பட்டது. ஆனால், சம்போ மகோபத்ராவுடன் வந்த பெண்ணின் டிக்கெட்டின் ஒரு பகுதி காணாமல் போய்விட்டதால் அவருக்கு “போர்டிங்’ போட மறுக்கப்பட்டது. இது குறித்து, விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் டில்லி செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டு போய்விட்டது. இதனால், ஆத்திரமடைந்த சம்போ மகோபத்ரா, விமான நிறுவன கவுன்ட்டரில் இருந்த ஐந்து “வாக்கி டாக்கி’களை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். உள்நாட்டு “கார் பார்க்கிங் ஏரியா’ அருகில் நின்று கொண்டு, ஒவ்வொரு “வாக்கிடாக்கி’யாக தரையில் போட்டு உடைத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த விமான நிறுவன அதிகாரிகள், இது குறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்போ மகோபத்ராவும், அவருடன் வந்த பெண்ணும் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர். அங்கு,அவர்களுக்கும் விமான நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு பதியப்படாமல் இப்பிரச்னை முடிந்தது.