வளையலுடன் வந்த சீக்கிய மாணவி பள்ளியில் நீக்கம்
கையில் இரும்பு வளையலுடன் வந்த சீக்கிய மாணவி, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தெற்கு வேல்சில் உள்ள அபேர்தர் பெண்கள் பள்ளியில் 14 வயது மாணவி சரிகா சிங் என்பவர், மத நம்பிக்கை அடிப்படையில், “கரா’ என்ற இரும்பு வளையல் அணிந்து வந்தார். அதை கழற்றும் படி பள்ளி நிர்வாகிகள் கூறினார். ஆனால், அதை கழற்ற சரிகா மறுத்து விட்டார். “எனது வளையல் எனக்கு மிக முக்கியமானது. இது, எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை கூறும்’ என்று கூறிவிட்டார் சரிகா. இதையடுத்து, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சரிகா, தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரியர் பெற்றோர் கூட்டத்தில் சரிகாவின் தாய் சினிதா சிங் ஏற்கனவே வாதாடியுள்ளார். ஆனாலும், அது ஏற்கப்படவில்லை. “இது நகை அல்ல; எங்கள் மத நம்பிக்கை என்பதை பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்’ என்கிறார் சினிதா சிங். இது தொடர்பாக கருத்துக்கூற பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.