கோபி அருகே மகனின் அவசர காதல் திருமணத்தால் தந்தை விஷம் குடித்து தற்கொலை!!
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60), விவசாயி. மனைவி பெயர் வெள்ளையம்மாள் (55)
இவர்களது மகன் குணசேகரன் (32), தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
அதே மில்லில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த அலமேலு (25) என்ற பெண்ணுடன் குணசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மலர்ந்தது. இருவரும் மனம் விட்டு பேசி தங்கள் காதலை வளர்த்தனர்.
இந்த நிலையில் குணசேகரன், தனது காதல் விஷயத்தை தன் தாயாரிடம் தெரிவித்தார். அவரும் தன் கணவர் சின்னசாமியிடம் மகனின் காதல் விஷயத்தை சொன்னார். பிறகு இருவரும் பேசி மகனின் காதல் திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டனர். ஆனால் ஐப்பசி மாதம் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என குணசேகரனின் தந்தை சின்னசாமி கூறினார்.
இந்த நிலையில் நேற்று காலை குணசேகரன் காதலியை பவானிகூடு துறையில் திருமணம் செய்து கொண்டார். அவசரப்பட்டு மகன் திருமணம் செய்து கொண்டானே… உறவினர்களை அழைத்து திருமணம் செய்ய நினைத்திருந்தேனே… என்று கூறி தந்தை சின்னசாமி வேதனைப்பட்டார்.
நேற்று மாலை சின்னசாமி தன் வீட்டில் விஷம் குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating