ஆஸ்பத்திரியில் எலி கடித்து குழந்தை சாவு: எலிக்கு வைத்த பொறியில் பாம்பு சிக்கியது!!
ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை எலி கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்தது.
இங்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் உஷார் அடைந்த ஆந்திர அரசு மாநிலம் முழுக்க அரசு மருத்துவமனையை தூய்மை படுத்தவும் ஆஸ்பத்திரியில் கொட்டமடித்து வரும் எலிகளை பிடித்து அழிக்கவும் உத்தரவிட்டது. குண்டூர் அரசு மருத்துவமனையில் எலி வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. ஒரு எலி பிடித்தால் 10 ரூபாய் என கூலி நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த 3–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை 400 எலிகள் பிடித்து அழிக்கப்பட்டது. இருந்தாலும் எலியை முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் வார்டுகளில் எலியை பிடிக்க பொறி வைக்கப்பட்டது. நேற்று எலிப்பொறியில் பாம்பு குட்டி சிக்கியது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், அதிர்ச்சி அடைந்தனர். நோயாளிகள் அலறினர்.
உடனே ஆஸ்பத்திரியில் பதுங்கி இருக்கும் பாம்புகளை பிடிக்க பாம்பாட்டி வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பல இடங்களில் தேடியதில் ரேடியோலஜி பிரிவில் 105–வது அறையில் மேலும் ஒரு பாம்பு குட்டி இருந்ததை கண்டுபிடித்தனர். இது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
எலி கட்டுப்படுத்தப்பட்டு விட்டதால் உணவுக்காக எலியை தேடி ஆஸ்பத்திரிக்குள் பாம்பு வந்து இருக்கலாம் என பாம்பாட்டி கூறினார்.
Average Rating