வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறையில் சதாம் உண்ணாவிரதம்
தங்களது வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி, இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனும், அவரது முன்னாள் அமைச்சர்கள் மூவரும் கடந்த ஒருவாரமாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இராக்கில் சிறைக் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமெரிக்க ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கெய்ர் கெவின் கர்ரி இத் தகவலைத் தெரிவித்தார்.
சதாம் ஹுசைனுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த காமிஸ் அல்-ஒபெய்தி கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு சதாம் வழக்கறிஞர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இவர்களை ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கள் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என ஆட்சேபம் தெரிவித்து கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சதாம் ஹுசைனும், அவரது சகாக்கள் மூவரும் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதனிடையே, தகுந்த பாதுகாப்பு அளிக்காவிடில், நீதிமன்ற விசாரணையைப் புறக்கணிக்கப் போவதாக சதாமின் வழக்கறிஞர்கள் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அவர்கள் விசாரணையில் பங்கேற்காவிட்டால், நீதிமன்றம் நியமிக்கும் வழக்கறிஞர்களே சதாம் தரப்பு இறுதிக் கட்ட வாதங்களை மேற்கொள்வார்கள் என நீதிபதி எச்சரித்துள்ளார்.