ஏரல் அருகே பட்டதாரி பெண் குத்தி கொலை
ஏரல் அருகே கம்யூட்டர் சென்டர் பெண் ஊழியர், அவரது அக்காள் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் இல்லங்குடி. இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி கனகமணி. இவர்களுக்கு பால்கனி, செல்வகுமாரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பால்கனியை கடந்த 3 மாதங்களுக்கு முன் சிவகளை கீழத் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ஞானமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஞானமணி கூலி வேலை செய்து வந்தார். இரண்டாவது மகள் செல்வகுமாரி சாயர்புரம் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து விட்டு ஏரலில் உள்ள கம்யூட்டர் சென்டரில் வேலை செய்து வந்தார். தீபாவளிக்கு புதுமண தம்பதிகள் கோட்டைக்காடு வந்து பண்டிகையை கொண்டாடினர். அதன் பிறகு அவர்கள் சிவகளை திரும்பிவிட்டனர். இந்நிலையில் ஞானமணி, மனைவியிடம் தான் வேலைக்கு தூத்துக்குடி செல்ல இருப்பதாகவும், சமையல் செய்து வைக்கும்படியும் கூறிவிட்டு வெளியே சென்றார். அங்கிருந்து நேராக கோட்டைக்காட்டில் உள்ள மாமனார் வீட்டிக்கு வந்தார்.
வீட்டுக்கு வந்த மருமகனிடம் இல்லங்குடி என்ன விசயம் என்று கேட்டார். அப்போது ஞானமணி நான் முதலில் குளிக்க வேண்டும். வெண்ணீர் வைத்து தாருங்கள் என்று கூறவே மாமியார் கனகமணி வாய்காலில் தண்ணீர் எடுக்க சென்றார்.
வீட்டில் இல்லங்குடியும் செல்வகுமாரியும் இருந்தனர். அப்போது அவர்களிடையே ஏதோ பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. தந்தைக்காக செல்வகுமாரி பரிந்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமணி வாழை இலை அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து மைத்துனி செல்வகுமாரியை சரமாரியாக குத்தினார்.
இதில் கழுத்து உள்பட 4 இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடி இறந்தார்.