நச்சுப்பொருள் தடவிய பொம்மைகளை ஏற்றுமதி செய்ய தடை சீன அரசு உத்தரவு
சீனாவில் குழந்தைகளுக்கான பொம்மைகள் பெருமளவில் தயாராகின்றன. இந்த பொம்மைகளுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. இவை அகுவா டாட்ஸ் என்ற பெயரில் அமெரிக்காவிலும், பின்டீஸ் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவிலும் விற்பனை ஆகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான சீன பொம்மைகளை வாயில் வைத்து விளையாடிய 7 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். விசாரணையில் பொம்மைகளில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே 4 கோடிக்கும் மேற்பட்ட சீன பொம்மைகளை அமெரிக்கா பறிமுதல் செய்தது. இந்நிலையில் நச்சுப்பொருள் தடவிய பொம்மைகளை ஏற்றுமதி செய்ய சீன அரசு தடை விதித்து உள்ளது. அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட பொம்மைகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளின் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.