பொட்டு சுரேஷ் கொலையில் முழு பின்னணியை சொல்ல மறுப்பு: அட்டாக் பாண்டியிடம் தீவிர விசாரணை!!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்தவர் பொட்டுசுரேஷ். கடந்த 2013–ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். பொட்டுசுரேஷ் கொலையில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி 2½ ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை மதுரை தனிப்படை போலீசார் விமானத்தில் மதுரைக்கு அழைத்து வந்தனர். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் சமந்த்ரோகன் ராஜேந்திரா, விசாரணை அதிகாரி கோட்டைச்சாமி, சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் உள்ளிட்ட போலீசார் அட்டாக் பாண்டியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
பொட்டு சுரேசுடன் ஏற்பட்ட முன்விரோதம் குறித்து போலீசார் 50–க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அட்டாக் பாண்டி தெரிவித்துள்ளார். ஆனால் பொட்டு சுரேஷ் கொலைக்கான முழு பின்னணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலரது பெயர்களை குறிப்பிட்டு போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அட்டாக் பாண்டி வாய் திறக்கவில்லை.
மேலும் பொட்டு சுரேசுக்கும் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் இருந்த தொடர்புகள், முன் விரோதங்கள் குறித்தும் போலீசார் அட்டாக் பாண்டியிடம் விசாரித்தனர். அப்போதும் முழுமையான பதிலை அட்டாக் பாண்டி தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் நேற்று சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக முழுமையான தகவல்களை போலீசாரால் பெற முடியவில்லை.
இதை தொடர்ந்து விசாரணையை முடித்து அட்டாக் பாண்டி மதுரை 2–வது விரைவு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். நீதிபதி பாரதிராஜா அட்டாக் பாண்டியிடம் சில தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டார். இதையடுத்து வருகிற 6–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிடப்பட்டது.
பின்னர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அழைத்து சென்று பாளை மத்திய சிறையில் அட்டாக் பாண்டியை அடைத்தனர்.
Average Rating