மக்கா: பலி எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கையர்கள் பாதித்ததாக தகவல் இல்லை!!
சவுதி அரேபியாவின் மக்காவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மக்கா மசூதிக்கு வெளியே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பக்ரீத் என்பதால் அதிகமானவர்கள் வழிபாடு நடத்த மக்கா நகரில் குவிந்தனர்.
அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.
500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 4 ஆயிரம் பேரும், பல வாகனங்களும் ஈடுபட்டுள்ளன .
படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அவசர நிலை சிகிச்சைகள் அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கா நகரில் இம் மாதத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கர விபத்து இது. கடந்த சில நாட்களுக்கு முன் மக்கா மசூதியில் கிரேன் விழுந்த சம்பவத்தில் 105 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என, சவுதியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Average Rating