விமானத்தில் வந்த எத்தியோப்பிய நாட்டு ராஜநாகம்!
எத்தியோப்பிய நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானத்தில் ராஜ நாகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள் அந்த நாகத்தை அடித்துக் கொன்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் வந்ததும், சென்னை விமான நிலைய ஊழியர்கள், அதில் ஏறி சரக்குகளை கீழே இறக்கினர்.
அப்போது சரக்குப் பெட்டிகளுக்கிடையே சரசரவென சப்தம் கேட்டது. என்ன என்று பார்த்தபோது பெட்டிகளுக்கிடையே பெரிய பாம்பு இருந்தது. இதையடுத்து பெரிய பெரிய கம்புகளை எடுத்து வந்த ஊழியர்கள் அந்தப் பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் அடித்துக் கொன்றனர்.
பிறகு அந்தப் பாம்பை அருகில் சென்று பார்த்தபோது அது ராஜ நாகம் என்று தெரிய வந்தது. கடுமையான விஷம் கொண்ட அந்தப் பாம்பு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.
எத்தியோப்பாவிலிருந்துதான் அந்தப் பாம்பு வந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. கொல்லப்பட்ட நாகத்தை பின்னர் தீவைத்து எரித்து விட்டனர்.