புலிகள்-கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது. பதிலுக்கு இளங்கோவனை அடக்கி வை என்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். மறைந்த காங்கிரஸ் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 90வது பிறந்தநாள் விழாவில் இளங்கோவன் பேசியதாவது, பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த சண்டாளர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றனர். அந்த இயக்கத்தைச் சேர்ந்த சண்டாளர் (தமிழ்ச்செல்வன்) ஒருவர் இறந்ததற்கு தமிழக்ததில் ஊர்வலம் நடத்துகிறார்கள். போஸ்டர்கள் அடிக்கிறார்கள். உயர்ந்த பதவியில் உள்ள ஒருவரே (முதல்வர் கருணாநிதி) இரங்கற்பா பாடுகிறார். அதை அரசுத் துறையே வெளியிடுகிறது. இது எவ்வளவு பெரிய அவமானம். அதைப்பற்றி கேட்டால் தமிழ் உணர்வு என்கிறார்கள். விடுதலைப் புலிகளால் எத்தனை அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ் உணர்வு இல்லையா. காங்கிரசார் முடங்கி, அடங்கி கிடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்றார் இளங்கோவன்.