பாதாள சாக்கடையில் விழுந்த சிறுமி பிணமாக மீட்பு..!!
பாதாள சாக்கடையில் விழுந்த 6 வயது சிறுமியை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அந்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அச்சிறுமியின் பெற்றோரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒன்றாம் வகுப்பு படித்துவரும் அதிதி என்ற சிறுமி, கடந்த செப்டம்பர் 24-ம் தேதி டியூஷன் முடிந்து காரில் ஏற முயன்றபோது, கால் தவறி கீழே இருந்த மூடப்படாத பாதாள சாக்கடைக் குழிக்குள் விழுந்தார். மழை காரணமாக தெருவில் தண்ணீர் சூழ்ந்திருந்ததால் பாதாள சாக்கடை இருப்பது தெரியாமல் அச்சிறுமி கீழே விழுந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும் பாதாள சாக்கடைக்குள் விழுந்த சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாக விசாகப்பட்டிணம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இந்த பாதாள சாக்கடை தண்ணீர் கடலில் கலப்பதால், சிறுமி அதிதி அடித்துச் செல்லப்படும் அபாயம் இருப்பதால் தேடுதல் பணியில் தீயணைப்பு ஊழியர்களும், கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த சிறுமியின் சடலம் நேற்று, போகபுரம் மண்டல் மாவட்டத்தில் உள்ள திப்பலபலம் என்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அது தனது மகள்தான் என்பதை அவரது தந்தை உறுதி செய்துள்ளார். அழுகிய நிலையில் உள்ள அச்சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசின் அலட்சியத்தால், ஆசை ஆசையாய் வளர்த்த மகளை பறி கொடுத்த சிறுமியின் பெற்றோர்க்கு ஆறுதல் கூட கூற முடியாமல் அவர்களது உறவினர்களும் நண்பர்களும் தவித்து வருகின்றனர்.
Average Rating