அரசு ஆஸ்பத்திரியில் பிணம் மாறிய விவகாரம்: புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்க முடிவு…!!
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இருதய நோயாளி. இவர் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா தோன்றாம் பள்ளி சந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோஜ் (23). காசநோயாளி. இவர் தாம்பரத்தில் உள்ள காசநோய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மனோஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இருவரது பிணத்தையும் பிரேத பரிசோதனை செய்த நிலையில் மனோஜின் உடலை மணிகண்டனின் உறவினர்களிடம் ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் மாற்றி ஒப்படைத்து விட்டனர்.
அவர்கள் உடலை பள்ளிக்கரணைக்கு எடுத்துச் சென்ற இறுதிச் சடங்கு நடத்தி புதைத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மனோஜின் உடலை வாங்குவதற்காக வேலூரில் இருந்து உறவினர்கள் வந்தனர். அப்போது பிணம் மாறியது தெரியவந்தது.
இதையடுத்து மனோஜின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பிணத்தை மாற்றி புதைத்தது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசில் மனோஜின் உறவினர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து புதைக்கப்பட்ட மனோஜின் உடலை தோண்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Average Rating