கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கொடுமை: திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை..!!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவருடைய மகள் கண்மணி (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சியா பிள்ளையின் மகனான லாரி டிரைவர் வீரப்பன் (24) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்துவந்தனர்.
இதனை அறிந்த கண்மணியின் பெற்றோர் வீரப்பனை சந்தித்து பேசாமல் இருப்பதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண்மணியை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.
ஆனால் அதனையும் மீறி கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீரப்பன் தனது உறவினர் செல்வியின் துணையுடன் கோவை சென்று அங்கு கண்மணியை கடத்தி வந்து கள்ளக்குறிச்சியில் திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கண்மணியிடம் பெற்றோர் வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகை வரதட்சணை வாங்கி வரும்படி வீரப்பன் வற்புறுத்தினார். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் இதற்கு கண்மணி மறுத்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வீரப்பன் நேற்று அவரது உறவினர்கள் செல்வி (44), பரமாத்தாள் (45) ஆகியோர் சேர்ந்து கண்மணியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தனர். சம்பவத்தன்று இதுபோல் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் மனமுடைந்த கண்மணி விஷத்தை குடித்து விட்டார்.
இதில் மயங்கி விழுந்த கண்மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே கண்மணி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து கண்மணியின் தந்தை செல்வராஜ் கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வீரப்பன் மற்றும் அவரது உறவினர்களான செல்வி, பரமாத்தாள் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating