இந்தியர்களை தாக்கிய ஜெர்மானியர்களுக்கு அபராதம்
கிழக்கு ஜெர்மனியில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி இனவெறித் தாக்குதல் தொடர்பாக 2 ஜெர்மானியர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள மியூஜென் என்ற நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கண்காட்சியின்போது இந்தியர்கள் மீது 50க்கும் மேற்பட்ட ஜெர்மன் இனவெறியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் ஜெர்மனி இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த இனவெறித் தாக்குதல் தொடர்பாக 2 ஜெர்மானியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஓஸ்சாட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் முறையே 2625 ஈரோ மற்றும் 1500 ஈரோ அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. ஜெர்மனியில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய இனத்தவர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இத்தகைய தாக்குதல்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இனவெறி தொடர்பான குற்றச் செயல்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன.
அதிலும் கிழக்கு ஜெர்மனியில்தான் இத்தகையதாக்குதல்கள் அதிகம் நடைபெறுகின்றன. 1990ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. அதன் பின்னரும் கூட கிழக்கு ஜெர்மனியில் உள்ளூர்வாசிகளுக்கு முறையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆனால் வெளிநாட்டினர் கணிசமான அளவில் நல்ல வேலைகளில் அமர்வதால் ஆத்திரமடைந்துள்ள கிழக்கு ஜெர்மானியர்கள் இனவெறி வன்முறையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.