10 நாட்களுக்குள் அவசர நிலையை ரத்து செய்க: காமன்வெல்த் நாடுகளின் கெடுவை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு
“பாகிஸ்தான் அரசு 10 நாட்களுக்குள் அவசர நிலையை ரத்து செய்யவேண்டும் என்றும், நீதித்துறையை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு, அந்த நாட்டுக்கு கெடு விதித்து உள்ளது. இந்த கெடுவை ஏற்கமுடியாது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. காமன்வெல்த் அமைப்பு என்பது இங்கிலாந்து நாட்டின் காலனி ஆட்சியில் இருந்து விடுபட்ட நாடுகள் தங்களின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தி கொண்டது ஆகும். இதில் 53 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. காமன்வெல்த் நாடுகளின் மந்திரிகளின் நடவடிக்கை குழுவின் அவசரக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 5 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. இதன் முடிவில் காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் டான் மெக்கினன் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த கூட்டத்தில் 5 அம்ச திட்டத்தை செயல்படுத்துமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவற்றுள் முக்கியமானது நெருக்கடிநிலையை ரத்து செய்யவேண்டும் என்பது ஆகும். நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்க வேண்டும். அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்தப்படவேண்டும் என்பனவும் இந்த 5 அம்ச திட்டங்களில் இடம் பெற்று உள்ளன.
ராணுவத்தளபதி பதவியை உடனடியாக முஷரப் ராஜினாமா செய்யவேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மனித உரிமை இயக்கத்தினர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும். நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் காமன்வெல்த் அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.
22-ந் தேதி அன்று முடிவு
காமன்வெல்த் அமைப்பின் அடுத்த கூட்டம், உகாண்டாவில் தலைநகர் கம்பாலாவில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அப்போது பாகிஸ்தான் எடுத்து உள்ள நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். இந்த அமைப்பு கேட்டுக்கொண்டபடி பாகிஸ்தான் செயல்பட தவறினால் அது இந்த அமைப்பில் இருந்து நீக்கப்படும். இவ்வாறு டான் மெக்கினன் தெரிவித்தார்.
ஏற்க மறுப்பு
அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் இந்த கெடுவை ஏற்க மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
“வெளியில் இருந்து திணிக்கப்படும் கெடுவை ஏற்க முடியாது. ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கு நாங்களே சொந்தமாக தயாரித்து இருக்கும் அட்டவணைப்படி தான் செயல்படுவோம்” என்று அந்த அறிக்கையில் தூதர் தெரிவித்தார்.