சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரஷ்யா ஏவுகணை வீச்சு..!!
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஏற்கனவே அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த 30–ந் தேதியில் இருந்து ரஷியாவும் தாக்குதல் நடத்துகிறது.
ரஷியா ஏற்கனவே சிரியா அதிபர் பஷர் அல் ஆஷாத்துக்கு பல்வேறு ராணுவ உதவிகளை செய்து வந்தது. இப்போது நேரடியாகவே தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை விமானம் மூலம் குண்டு வீசியது. நேற்று முதன் முதலாக கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
காஷ்பியன் கடலில் நிறுத்தப்பட்டு இருந்த 4 கப்பல்களில் இருந்து ஏவுகணைகளை வீசினார்கள். சிரியாவில் உள்ள ஹமா, இத்லிப் ஆகிய இடங்களில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. மொத்தம் 26 ஏவுகணைகள் வீசப்பட்டன.
இதில், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அறை, ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாக ரஷியா கூறி இருக்கிறது.
கப்பல் நின்றிருந்த இடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடம் 1,500 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனாலும் ஏவுகணைகள் துல்லியமாக தாக்குதலை நடத்தின.
கடந்த 30–ந்தேதியில் இருந்து ரஷியா இதுவரை 112 இடங்களில் தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷியா, ஐ.எஸ். தீவிரவாதிகளை சரியாக குறி வைத்து தாக்கவில்லை. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் தான் உயிர் இழக்கிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இதை ரஷியா மறுத்துள்ளது
Average Rating