பொதுமக்கள் நிதியில் புங்குடுதீவூ வைத்தியசாலை புனரமைப்பு!
புங்குடுதீவு மக்களின் பங்களிப்புடன் புங்குடுதீவு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி சுமார் முப்பது லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த கால மோதல் அனர்த்தங்களால் சேதமடைந்த புங்குடுதீவு வைத்தியசாலையைப் புனரமைப்பதற்கு புலம்பெயந்த மக்கள் முப்பது இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளனர். இந்த நிதியைக் கொண்டு முதற்கட்டமாக மகப்பேற்று விடுதி புனரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதால் அடுத்த மாதம் மகப்பேற்றுப் பிரிவை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவகிறது. ஏற்கனவே புங்குடுதீவு வைத்தியசாலையிலுள்ள நோயாளர் சிகிச்சைப் பிரிவும் நோயாளர் விடுதியும் புலம்பெயர்ந்த புங்குடுதீவு மக்களின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டன. இது அம்மக்களின் சமூக சேவைக்கான ஒரு சிறந்த முன்மாதிரியாகும். புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் வட பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கொடூர மோதல்கள், வன்முறைகள் என்பவற்றால் தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் பாதிப்புற்று வருகின்றனர். அம்மக்களின் மருத்துவ நலன்கருதி, கருணைப் பார்வையுடன் பங்களிப்புச் செய்த புலம்பெயர்ந்த புங்குடுதீவு வாழ் மக்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் போற்றத்தக்கதாகும் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.