தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கம்!
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதிலும் நிதி சேகரித்துவந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திதன் (டீ.ஆர்.ஓ) வங்கிக் கணக்குகளை நேற்று முதல் அமெரிக்கா முடக்கியுள்ளது. வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவென இவ்வமைப்பு சேகரிக்கும் நிதி எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு நேரடியாக வழங்கப்படுவதாகக் கிடைத்த தகவல் உறுதிப்படுத்தபட்டதையடுத்தே அமெரிக்க அரசாங்கத்தின் திறைசேரி இவ்வமைப்பின் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்த அமைப்பு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு நிதி சேகரிப்பதற்கும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கும் வழி வகுக்கக் கூடிய மறைமுகக் கரமாகத் திகழ்கிறது என அமெரிக்கத் திறைசேரி அறிவித்துள்ளது. எனவே பயங்கரவாதக் குழுக்களையும் அவற்றுக்கு உதவி வழங்கும் வலைப் பிண்ணலையும் நிதி ரீதியாக தனிமைப்படுத்தும் நோக்கத்தையுடைய உத்தரவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உள்ளடக்கப்படுவதாக திறைசேரி மேலும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த அமைப்பினால் அமெரிக்காவில் எந்ந நபரும் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. அத்துடன் இந்த நபர்களோடு அமெரிக்கப் பிரஜைகள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது தடை செய்யப்படுவதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உலகெங்கும் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலம் திரட்டப்படும் மனிதாபிமான உதவிகள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் இராணுவ ஆற்றலைப் பலப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளில் பயன்படுத்தப்படுவதாவும் அமெரிக்கத் தூதுரகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெளிநாடுகளில் தொண்டர் நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் பல்வேறு அமைப்புக்கள் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடம் பலவந்தமாக அறவிடும் நிதி வருடமொன்றுக்கு 30 கோடி அமெரிக்க டொலர்கள் (இலங்கைப் பெறுமதி ஏறக்குறைய 4000 கோடி ரூபா) எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு அனுப்பப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.