நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்: அ.தி.மு.க. கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மற மடக்கியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர். ரவிக்குமார் தற்போது அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு அ.தி.மு.க கவுன்சிலராக இருந்து வருகிறார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி சாலையில் நடந்து சென்ற சில மாணவிகளை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வழிமறித்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரவிக்குமார், மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனால் அந்த வாலிபர்கள் ரவிக்குமார் மீது ஆத்திரமடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 23–ந்தேதி ரவிக்குமார் தனது மாமனார் ஊரான சொர்ணக்காட்டிற்கு சென்று விட்டு தனது மனைவி, மகனுடன் கொத்தமங்கலம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கொத்தமங்கலத்திற்கும், மற மடக்கிக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபர்கள் ரவிக்குமாரை வழிமறித்து அவரையும், அவரது மனைவி, மகன் ஆகியோரையும் தாக்கி உள்ளனர்.
மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், ரவிக்குமாரின் வேட்டியை கழற்றி நிர்வாணப்படுத்தி செல்போனில் படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த 3–ந் தேதி ரவிக்குமார் தனது மனைவியுடன் அறந்தாங்கியில் இருந்து மறமடக்கி சென்று கொண்டிருந்தபோது அவர்களை மீண்டும் வழிமறித்து தாக்கிய வாலிபர்கள், ரவிக்குமார் மனைவியின் சேலையை உருவ முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர்கள் 7 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஊருக்கு சென்ற அந்த வாலிபர்கள் ரவிக்குமாரிடம், எங்கள் மீது போலீசில் ஏன் புகார் கூறுகிறாய். நீ நிர்வாணமாக உள்ள படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினராம்.
இதனால் மனமுடைந்த ரவிக்குமார் நேற்று வீட்டில் வைத்திருந்த விஷப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் அதே ஊரை சேர்ந்த ரவிக்குமார், அசோக்குமார், வினோத், பார்வேந்தன், ஆனந்தன், மெய்யநாதன், பிரசன்னதேவா ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating