சிங்கையில் வாலிபர் படுகொலை: தடுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!
நெல்லை மாவட்டம் சிங்கையில் உள்ள கட்டப்புளி மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி துரைச்சி (வயது65). இவர்களுக்கு செல்வம் (29), குமார் (27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்தனர்.
அங்கிருந்து செல்வமும், குமாரும் அனுப்பிய பணத்தில் முத்துகிருஷ்ணன் 2 வீடுகள் கட்டி உள்ளார். அதன் அருகே முத்துகிருஷ்ணனுக்கு சொந்தமாக 4 சென்ட் காலி இடம் உள்ளது. அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று துரைச்சியின் சகோதரர் சுடலை நீண்ட காலமாக தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த செல்வம் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது அவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தாய் மாமா சுடலையிடம் உறவினர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்களது உறவினர்கள் பிரச்சினைக்குரிய இடத்தை சுடலை விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
இது சுடலைக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று இரவு சுடலையும் அவரது மகன் சுரேஷ் மற்றும் 4 உறவினர்கள் செல்வத்தின் வீட்டுக்கு சென்று அவரை உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய செல்வத்தை ஓட ஓட விரட்டி கத்தியாலும் குத்தினர்.
அப்போது மகனின் அலறல் சத்தம் கேட்டு துரைச்சி மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். சுடலையும், அவரது உறவினர்களும் துரைச்சியையும் உருட்டு கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வம் மற்றும் துரைச்சி பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார். துரைச்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சிங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலை, அவரது மகன் சுரேஷ் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating