பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டில் இரு குழந்தைகள் பலி
கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதையும், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்து கராச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது பெனாசிர் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பேரணியில் பங்கேற்றோர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் பாகிஸ்தான் மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கராச்சியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், ஏராளமான பெனாசிர் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.