மனைவியை கொலை செய்த கணவருக்கு 16வருட கடூழிய சிறைத்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு…!!
2009ம் ஆண்டு ஒக்ரோபர் 27ம் திகதி கைதடி கிழக்கில் இடம்பெற்ற குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான கணவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 16வருட கால கடூழிய சிறைத்தண்டனையும், ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
2009ம் ஆண்டு ஒக்ரோபர் 27ம் திகதி கைதடி கிழக்கில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குடும்பத் தகராறாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இதனால் மனைவி துரதிஸ்டவசமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சாவகச்சேரிப் பொலிஸார் கணவரைக் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியது.
கொலையற்ற மரணம் விளைவித்தமை தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் 2013ம் ஆண்டு செப்ரெம்பர் 12ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குறித்த வழக்கை விசாரித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் குடும்பத்தகராறு காரணமாக கணவன் மனைவியை கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இது திட்டமிட்ட கொலை அல்ல. இதுவொரு கொலையற்ற மரணம், ஆகவே குறித்த கணவருக்கு 16வருட கால கடூழிய சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Average Rating