தேனி அருகே குழந்தையை கொன்று தற்கொலை செய்த தம்பதி…!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருஷநாட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது31). அங்குள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா(28). இவர்களது மகள் கம்லீசா(6). தாய்–மகள் இருவரும் கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். சதீஷ் அவர்களை பல ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். எனினும் நோய் குணமாகவில்லை.
தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானமும் மருத்துவ செலவுக்கே போததால் சதீஷ் பலரிடம் கடன் வாங்கினார்.
கடன் வாங்கி மருத்துவம் செய்தும் நோய் குணமாகாததால் சதீசும், ரேகாவும் மனமுடைந்தனர். இனி வாழ்வதில் பிரயோஜனம் இல்லை. குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். நேற்றிரவு அவர்கள் மகள் கம்லீசாவுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தாங்களும் குடித்தனர். சிறிதுநேரத்தில் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் சதீஷ் வீட்டு கதவு திறக்கப்படாததால் பக்கத்து வீட்டார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் 3 பேரும் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வருஷநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating