தலை நிறைய மல்லிகைப்பூ, தழைய தழைய காஞ்சிபுரம் புடவை! -ப்ரியாமணியின் புதிய சந்தோஷம்!
சினிமாவில் மட்டுமல்ல. பொதுவிழாக்களில் கூட புடவைக்கு விடை கொடுத்துவிட்டார் ப்ரியாமணி. காரணம்… புடவை, தாவணி என்று மறுபடியும் கிராமத்து வேடம் கட்ட யாராவது அழைத்துவிட்டால் என்னாவது என்ற பயம்தான். ஆனால் நீண்டநாள் கழித்து புடவை கட்ட போகிறாராம். (அட.. பொம்பளைங்க புடவை கட்டுறதெல்லாம் ஒரு நியூசா?) கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் குத்துவிளக்கு ஏற்றப்போகிற பெருமை ப்ரியாமணிக்கு கிடைத்திருக்கிறது. இது அவருக்கு சந்தோஷம் என்றால், கூடுதல் சந்தோஷம் இன்னொன்று! இவரின் கனவு நாயகன் ஷாரூக்கான் அந்த விழாவை துவங்கி வைக்க போகிறார். முதலில் தர்மேந்திரா, ரஜினி இருவரில் ஒருவர் துவங்கி வைப்பதாக இருந்த விழாவில் இருவருமே வர தயங்கியதால், ஷாரூக்கை அழைத்திருக்கிறார்கள். ‘தலைநிறைய மல்லிகைப்பூ, தழைய தழைய காஞ்சிபுரம் புடவை இந்த தோற்றத்தில் ஷாருக் பக்கத்தில் நான் நிற்பதை நினைத்தாலே புல்லரிக்குது’ என்கிறார் ப்ரியாமணி. எந்த நடிகைக்கு புடவை கட்டினாலும், அரிக்கதான் செய்கிறது! என்ன செய்ய?