இம்ரான்கான் கைது: முன்னாள் மனைவி ஜெமிமா கவலை; முஷரப்பின் ஒடுக்குமுறைக்கு கடும் கண்டனம்
பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான்கானை பாகிஸ்தான் அரசு கைது செய்தது அவரது முன்னாள் மனைவி ஜெமிமாவுக்கு கவலையை தந்து உள்ளது. அவர் அதிபர் முஷரப்பின் ஒடுக்குமுறைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நீதிக்கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமிமா. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜெமிமா, இம்ரானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் 10 ஆண்டு காலம் அவருடன் வாழ்ந்தபிறகு அவரை பிரிந்தார். ஜெமிமாவை இம்ரான் கான் விவாகரத்து செய்து விட்டார். சமீபகாலமாக அவர்கள் இடையே தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தினமும் டெலிபோனில் பேசி வருகிறார்கள். இந்தநிலையில், முஷரப் நெருக்கடிநிலை பிரகடனம் செய்ததும், அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் அடைத்து வைத்தார். இம்ரான்கானும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு இருந்து தப்பி விட்டார். அதன்பிறகு, தலைமறைவாக இருந்த அவர், லாகூரில் நடந்த மாணவர்கள் பேரணியில் கலந்து கொள்வதற்காக மறைந்து இருந்த இடத்தில் இருந்து வந்தபோது கைதானார். அவர் மீது தீவிரவாதத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை கைது செய்தது ஜெமிமாவுக்கு கவலையை அளித்து உள்ளது. அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அவரை கைது செய்து இருப்பது கவலை அளிக்கிறது. முஷரப் பாகிஸ்தானின் மோசமான கொடூர சர்வாதிகாரியாகி விட்டார் என்பதையே இது காட்டுகிறது.
லண்டனில் பேரணி
என் கணவரை கைது செய்தது முதல் அவருடன் டெலிபோனில் பேசமுடியவில்லை. நாங்கள் சமீபகாலமாக தினமும் டெலிபோனில் பேசிவந்தோம். பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு எதிராக லண்டனில் ஒரு பேரணி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஏற்கனவே நடந்த கண்டன பேரணியிலும் நான் பங்கு கொண்டேன்.
பாகிஸ்தானில் எல்லாத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர்கள், வக்கீல்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவரையும் குறி வைத்து முஷரப் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், தீவிரவாதிகளை மட்டும் கைது செய்வது கிடையாது. அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இவ்வாறு ஜெமிமா கான் தெரிவித்தார்.