பிரான்ஸில் பயங்கரம்: பயணிகள் பேருந்து – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி…!!
பிரான்ஸ் நாட்டில் உள்ள சாலை ஒன்றில் பயணிகள் பேருந்து மீது லொறி ஒன்று பயங்கரமாக மோதி வெடித்து சிதறியதில் 42 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸின் மேற்கு பகுதியில் உள்ள லிபோர்ன் என்ற நகருக்கு அருகில் உள்ள Puisseguin கிராமப்புறத்தில் தான் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.
சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவலில், 46 பயணிகளுடன் பேருந்து ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருந்துள்ளது.
அப்போது, எதிரே வந்த லொறி ஒன்று பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது.
விபத்து நடந்த பகுதிக்கு 60 தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளதாகவும், தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விபத்தில் 8 பேர் வரை உயிர் பிழைத்துள்ளதாகவும், எஞ்சிய 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை நேரடியாக பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், ‘சாலையில் சென்றுக்கொண்டு இருந்த பயணிகள் பேருந்தின் சக்கரங்கள் திடீரென நிலை தடுமாறி தாறுமாறாக சென்று எதிரே வந்த லொறி மீது நேருக்கு நேராக மோதி வெடித்து சிதறியது’ என்றார்.
விபத்து குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உயிர்பிழைத்துள்ளவர்களை காப்பாற்ற அவசர உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 33 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த மிக கோரமான சாலை விபத்து என மீட்புப்படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Average Rating