இதய தானம் செய்தவர் குடும்பத்துக்கு வித்தியாசமான முறையில் நன்றி செலுத்திய இளைஞர்…!!
உயிரை இழந்தாலும் நம்மால் மற்றவரை வாழவைக்க முடியும் என உணர்த்துவது உடலுறுப்பு தானமே! நோயால் உயிரிழக்கப் போகிறோம் எனத் தெரிந்ததும், சிலர் தமது உடலை தானம் வழங்க முன்வருவதுண்டு. ஆனால், அவர்களது உடலைக் கூறு போடுவதை சகித்துக்கொள்ள முடியாமல் குடும்பத்தார் தானம்தர முன்வருவதில்லை.
தமது மனம் நொந்தாலும் பரவாயில்லை என தானத்துக்கு ஒப்புக்கொள்ளும் உறவுகளை நிச்சயமாக பாராட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை சரியாக உணர்ந்த ஒரு இளைஞர் தனக்கு இதயம் கிடைக்க காரணமான குடும்பத்தாருக்கு வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஆர்லாண்டோ நகரத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு பன்னிரண்டு வயதானபோது, அவரது இதயத்தின் அளவு இயல்பை விட பெரியதாக இருப்பதாக கண்டறியப்பட்டது என்றும் இதனால், தனது உடல்நிலை மோசமடைந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்சனையால் இதயம் ரத்தத்தை உந்திச் செலுத்த முடியாமல் போனது.
தொடர்ச்சியாக, அவரது உடல்நிலை மோசமடையவும், உடலின் எடை பாதியாக குறையவும் காரணமானது. இதனால் இதயமாற்று அறுவை சிகிச்சையை இரு ஆண்டுகளுக்குள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இறந்த ஒருவரின் இதயத்தை தானமாகப் பெற்று, இதயமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர், தற்போது ஆறாண்டுகளாக நல்ல உடல்நிலையுடன் அந்த இளைஞர் உள்ளார். சமீபத்தில், தனக்கு இதய தானம் கிடைக்க காரணமான அந்த நபரின் குடும்பத்தாருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது பெயருடன் தனது மார்பில், இதய வடிவத்தை பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
இதய தானம் கிடைத்த நாள்முதல் இன்றுவரை அந்தக் குடும்பத்தாருடன் தமது குடும்பம் நல்ல நட்புடன் இருப்பதாகவும், அவர்களது பரந்த மனப்பான்மைக்காக நன்றி செலுத்த எண்ணியதாலேயே இதுபோல பச்சைக் குத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating