கோவையில் பட்டாசு வெடித்து முதியவர் உடல் கருகி சாவு: வீடுகள் இடிந்தன…!!
கோவை உக்கடம் அருகேயுள்ள கெம்பட்டி காலனி கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி(வயது 40). இன்று காலை 11.30 மணி அளவில் இந்த வீட்டில் குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது.
உக்கடம் பெரியகடை வீதி போலீசார் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர் கீதா, இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இடிபாடுகளை அகற்றினர். அங்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கருகி இறந்து கிடந்தார். தேவியின் மகன் நவீன்(11) பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.
போலீசார் அவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேவியின் வீட்டில் வெடித்தது என்ன என்பதை அறிய போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேவி வீட்டில் வெடித்தது கோவையில் பிரபலமாக பேசப்படும் லாலா வெடி என்பது தெரியவந்தது.
அந்த வெடி வெடித்ததில் தான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. வெடித்தது பட்டாசு தானா? அல்லது வேறு ஏதும் மர்ம பொருளா? என்று போலீசார் தேவியிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
பட்டாசு வெடிச்சத்தம் 5 கி.மீ. தூரத்துக்கு கேட்குமா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின் முடிவில் தான் வெடித்தது லாலா வெடி தானா? அல்லது வேறு ஏதும் பொருளா? என்று தெரியவரும்.
மேலும் தேவியின் வீட்டுக்குள் இறந்து கிடந்த முதியவர் யார்? என்றும் தெரியவில்லை. அவர் ஏன் தேவியின் வீட்டுக்கு வந்தார்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். வெடி வெடித்ததில் அந்த வழியாகச் சென்ற நாய் ஒன்று இறந்து கிடந்தது. அருகில் உள்ள 2 வீடுகளும், வீடுகளின் கண்ணாடிகளும் சேதமடைந்தன. கோவையில் இன்று பட்டாசு வெடித்து முதியவர் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating